Tuesday 6 December 2011

வலி கொடு



சிறு கதை
-------------------------------------------------

வலிக்குதும்மா


மருந்து சாப்டாச்சே கண்ணு.....இதோ இப்ப சரியாயிடும் பாரு


ம்...


தூங்கு...


ம்..ஹூம்....ரொம்ப வலிக்குதும்மா


சாமி விபூதி தடவறேன்.  வலி பட்னு காணாம போயிடும் சரியா? ”


இல்ல....தாங்க முடியல, வலிக்குது..


இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கோ.  சரியாயிடும்டா கண்ணு


உனக்கு இந்த மாதிரி வலிச்சா தெரியும்


சாமி...கடவுளே.....என் ராதா குட்டிக்கு எத்தனை மருந்து கொடுத்தும் வலி கொறையலயே. இந்த பிஞ்சை ஏன் இப்படி வதைக்கறே? அந்த வலி எல்லாத்தையும் எனக்கு கொடுப்பா.


அம்மா...நீ பெரியவ. ரொம்ப பெரிய வலியை உன்னால பொறுத்துக்க முடியும் இல்லமா?


ஆமாண்டி செல்லம். நிறைய தாங்கிக்க முடியும். அதான் சாமி... எனக்கு வலி குடுன்னு வேண்டிக்குவேன்.  இன்னும் பத்து நிமிஷந்தான். உன் தலையிலேருந்து வலி உஷ்ஷுன்னு பறந்து வந்து அம்மா தலைக்குள்ள ஒக்காந்துக்கும்.  பாக்கறியா?


ம்...


உன் அண்ணாவுக்கு இப்படிதான், திடீர்னு ஒரு நாள் தொப்பை வலி வந்து துடிச்சு போயிட்டான்.


இங்கயா.. பாரு?


ம்...அங்கதான். உன்னை மாதிரி ராமுவுக்கும் அப்ப சின்ன வயசு


8 வயசா?


ஆமாம்
 

ம்..சொல்லு


இதே மாதிரி தான். என் மடில படுத்துகிட்டு, அம்மா தொப்பை வலி தாங்க முடியலம்மான்னு அண்ணா கத்தினான்


அழுதானா?


ஒரே அழுகை


சாமியை வேண்டினியா?


“ஆமாம். ‘சாமி என் புள்ளையை இப்படி வலி கொடுத்து சோதிக்கறயே? அந்த வலியை எனக்குக் கொடுன்னு சத்தமா கேட்டு அழுதேன்


நீ அழுதியா?


ம்..


எனக்கும் அழுகை வராப்பல இருக்குமா


அழ வேணாம்.  கேளு. அண்ணாவை கூட்டிட்டு டாக்டர் கிட்ட போனோமா?


எனக்கு வலி இப்ப கொஞ்சந்தாம்மா இருக்கு. அப்பறம்?


டாக்டர், அண்ணாக்கு உடனே ஆபரேஷன் பண்ணனும்னு சொல்லிட்டார்


அய்யோ


ஒரு எறும்புக்கடி மயக்க ஊசியோட சரி.  உடனே ஆபரேஷன் முடிஞ்சு அண்ணா சிரிச்சுட்டே வெளிய வந்துட்டான்.  அவன் வலியும் ஓடிப்போச்சு


என்ன ஆபரேஷன்?


அபெண்டிசைட்டிஸ்?”


அபாண்ஸி..  ஸி...?”


என்ன சொன்ன ?


நீயே சொல்லுமா?


ம்..ஹூம்...திருப்பி சொன்னா நான் தப்பு பண்ணிடுவேன்


 “அம்மா...


என்ன?


தலவலி போயிடுச்சு, விளையாடப் போட்டா?


ம்...போ  

-----------------------------------------------------------------------------------------------------------


முப்பத்தஞ்சு வருஷம் முன்னால எனக்கு வயசு 8.


பெருமூச்சு....இது நான்தான்.   அம்மா இல்ல.


ஆமாம். அம்மா இப்ப இல்ல. இன்னியோட எங்கம்மாவோட காரியமெல்லாம் முடிஞ்சு முப்பது நாள் ஓடியாச்சு..


அப்பறம் வேறெப்பலாம்மா சாமிகிட்ட நீ வேண்டிகிட்ட?ன்னு அம்மாவை ஒரு தரம் விளையாட்டா கேட்டேன்.


திடீர்னு அப்பாவுக்கு ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட். அப்பாவுக்குதான் வலி தாங்காதே. கடவுளே அவர் வலியை எனக்கு கொடுத்துடுப்பான்னு கேட்டேன்.


அப்படியே வரிசையா மளமளன்னு சொல்லிக் கொண்டு போனாள்....


அப்பா  அண்ணாவை அடிச்சபோது, அண்ணாவுக்கு வலிச்ச வலிக்கு...


அண்ணியோட பிரசவ வலிக்கு...


பாட்டியோட பல்வலிக்கு.....


மாமாவோட மார் வலிக்கு...


பேத்தி மடால்னு கட்டில்லேருந்து கீழ விழுந்த வலிக்கு......


பேரன் மூக்கு மேல, பக்கத்து வீட்டு பையன் ஓங்கி குத்தின வலிக்கு....


இது எல்லாத்துக்கும், கடவுளே..வலி கொடு..வலியை எனக்கு மட்டும் 
கொடுனு அசட்டு அம்மா பொசுக்கு பொசுக்குனு யோசிக்காம சாமியை வேண்டியிருப்பா.


கேட்டால் கொடுக்காமல் போக அந்த ஆண்டவன் இல்லாமல் இருந்தால் தானே? 


கொடுப்பான். 


கொடுத்தான். 


அம்மாவின் கடைசி பத்து வருடங்கள் மனவலியுடன், கூடுதலாக கால் வலியையும் சேர்த்து கொடுத்தான். அப்பறம் இங்கும் அங்குமா ஒடம்புல சின்னதும் பெரிசுமா இன்னும் நிறையவே வலிகள். ஆகமொத்தம் வலிக்கு கொறச்சலே இல்லை. வேற என்னத்த அவ வரமா கேட்டா? வலியைத் தவிர?


கடைசி 30 நாள் படுத்த படுக்கையாய் இருந்தபோதும் வலி.


கடைசி இரண்டு நாட்கள் அரை மயக்கத்தில், இரண்டு கால்களிலும் வலியின் உச்சம்.  பாதத்தில் ஆரம்பித்த வலி, சிறுகச்சிறுக முட்டிவரை ஏறி, 24 மணி நேரத்துக்குள் அதன் உரிய அடையாளங்களுடன் (நரம்புகள் புடைத்து, செக்கச்செவேலென) தொடை வரை ஏறிவிட்டது.  அவள் இது வரை வாழ்நாளில் கண்டிராத வலி அது. 


உயிர் போற வலி...


உயிர் போறதுக்கு முன்னாடி வர்ற வலி...


மருந்து சரியில்லையா? மருத்துவர் சரியில்லையா? ஆஸ்பத்திரி சரியில்லையா? இல்லை பெத்த பசங்களா?


எது எப்படியோ?


ஒன்று மட்டும் உண்மை.  ஒன்று மட்டும் சரி. அது அவள் அப்போது அனுபவித்த அந்த வலி.


ஆண்டவன் இருக்கிறான்.


அம்மாவின் வாழ்க்கையில் இதுவரை சொல்லியும், சொல்லாமலும் ஆயிரம் வலிகள் இருந்திருக்கும். அதெல்லாம் எனக்கு தெரியாமலில்லை. ஆனால் அம்மா போனதுக்கப்பறம் முதலில் நினைவுக்கு வருவது....அம்மா கடைசியா பேசினது, கடைசியா தூங்கினது, கடைசியா சிரித்தது, கடைசியா கேட்டது, கடைசியா வலித்தது இதெல்லாம்தான். ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன் மாதிரியே, லாஸ்ட் இம்ப்ரெஷனும் மனதில் பதிந்து விடுகிறது.


இதோ அம்மாவின் கடைசி 12 மணி நேரங்கள்...அப்படியே என் நினைவிலிருந்து....


ஆஸ்பத்திரி நிசப்தம், மணி சரியா இரவு 1.31....


ராதா


“என்னம்மா?


“ராதா...ராதா....வலி..


என் செல்ல அம்மா இல்ல, சரியாயிடும்


கால்... கால் வலி.


இந்த காலாம்மா?


ரெண்டு காலும்


மருந்து இப்ப சாப்டியே. சரியாயிடும் பார்


ராதா....ராதா...வலி...வலி..


என் கண்ணு இல்ல..ராமா ராமான்னு சொல்லுமா...வலி போயிடும்...யோகிராம் சுரத்குமார்னு சொல்லுமா


அதே அரை மயக்கந்தான்.


ராம்...ராம்....யோகிராம்  சுரத்குமார்....ராம்...ராம்...யோகிராம் சுரத்....யோகிராம்.....ராம்...ராம்...ராதா... 


நீ கேட்டதை கேட்டபோது கொடுக்காம நாள் குறித்து கொடுக்கிறான். அதுவும் நாள்கணக்கா கொடுக்கிறான்.


ஆண்டவன் இருக்கிறான்.....


ராதா....ராதா...வலி..


இப்ப கொறஞ்சுடும் பாரு


வலிக்குது


யோகிராம் சொல்லுமா


குழந்தை மாதிரி சொன்னாள்.  யோகிராம்......ராம்...ராம்....


அதே ஆஸ்பத்திரி நிசப்தம்,  காலை மணி 3.00


ராதா ராதா....வலி....வலி


“ராம்...ராம்...ராம் சொல்லு


ராம்.....ராம்....ராம்......ராம்...........ராதா........ராதா........ராம்.....ராம்.........ராதா.....ராம்.........ராதா..........ராம்............ராதா........ராம்  அவள் கண்களில் கண்ணீர் வழிந்தபடி இருக்கு. என் கண்ணிலும் தான். அந்த நேரத்துல அது ஒண்ணுதான் என்னால முடிஞ்சது.


ராதா....ராதா...


மறுநாள் காலை 6 மணிக்கு அம்மா ஐ.சி.யூவுக்குப் போனப்பறம், ராமா... ராதாஎதுவும் எனக்கு கேக்கல.  அவ கூடதான் சாமி இருக்காரே!!  வலியை ஊசி ஊசியா அவர்தானே ஏத்தறார்!.


பகல் மணி 11.00. அவளின் அதிகபட்ச வலி.  கடவுளே...இன்னும் ஐ.சி.யூக்குள்ளதான் இருக்கியா?


மதியம் மணி 1.00.  வலியின் உச்ச கட்டம்.   ஐ.சி.யூ குலுங்கியது.


ஆண்டவன் இருக்கிறான்...


மணி 1.20.....ஒரு வழியாக வலி குறைந்துவிட்டதை டாக்டர் எங்களுக்கு சொன்னதைத் தொடர்ந்து,  சாமியும் விடை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். உறவுகள் எல்லாத்துக்கும் நாங்கள்  ‘அம்மாவுக்கு வலி விட்டதை சொல்லி அனுப்பிவிட்டோம்.


மதியம் மணி 1.31.... அம்மா வலி முற்றும் அடக்கம்.  கூடவே எனது அழுகையும் அடக்கம்.

***********************
Geetha
Published : Gokulam Kadhir , January, 2012.                                                

Saturday 1 October 2011

ஒரு வா காபி



சிறு கதை

காத்தாலேருந்து லேசா இருந்த தலைவலி ஜாஸ்தியாயிடுச்சு இப்ப. அம்மா காபி சூடா குடிச்சா தேவலை. குடிச்சா தலைவலி பட்னு விட்டுடுமா?

எனக்கு கல்யாணம் ஆகறதுக்கு முன்னால் அடிக்கடி அம்மா காபி தருவாள். அதுவும் பரிட்சைக்கு படிக்கும் போது ராத்திரி 2 மணிக்கும் 3 மணிக்கும் டாண் டாண்னு அலாரம் வச்ச மாதிரி எழுந்து கலந்து தருவாள். என்ன ஒண்ணு....அரை மணியில் தூக்கம் வந்துவிடும்....காபி அப்படி மயக்கும்...!


தூங்கி எழுந்துக்கறதே, காத்தால எழுந்து பல்தேச்சதும் அம்மா கலந்து குடுக்கப்போற அந்த காபிக்காகதானோன்னு தோணும்.


வீட்டுக்கு யார் வந்தாலும். அவர்களுக்கு காபி உபசாரம் நடக்கும். என் ஃப்ரெண்ட்ஸ்,  அப்புறம் உறவினர்கள்,  அப்பா ஆபீஸ் சகாக்கள் இப்படி எல்லாரும். சில சமயம் டிகாக்ஷன் இருக்காது. யாராவது திடீர்னு வந்துடுவாங்க. ஒரே நிமிஷந்தான். அம்மா மணக்க மணக்க ஃபில்டர் காபி ரெடி பண்ணி விடுவாள்.

அப்பா,   அம்மா போடற காபி நல்லாருக்குன்னா,   அவர் ஒரு நாலு தடவை குடிக்கட்டும். இல்ல ஆபீஸ் ஆசாமிகளுக்கு மட்டும் கொடுக்கட்டும். அதோட நிறுத்தாம கமலா...ராமுவுக்கு கொஞ்சம் காபி போடேன். எல்லாம் ரெடி. இதோ டியூப் லைட்டும் மாட்டிட்டா வேலை முடிஞ்சதுராமு யாரு? என் அண்ணனா? இல்லை.எங்க வீட்டுக்கு ட்யூப் லைட் மாட்ட வந்த எலெக்ட்ரீஷியன். அவனுக்கும் சுடச்சுட அம்மா கை காபி கொடுக்கணும். அவன் உயரமான ஸ்டூல்ல நின்னு அண்ணாந்து பாத்து லைட்டை மாட்டும்போதே “இந்தாப்பா காபியை குடிச்சுட்டு மாட்டு. சூடு ஆறிடும்“னு அவனை அந்த பத்து நிமிஷ வேலையையும் ஒழுங்கா செய்ய விடாம உபசாரம்.

அன்னிக்கு இப்படிதான் கமலா...ஒரு வா காபி கலயேன். சிங்காரம் வந்துருக்கான் பாரு“ .

சூடா காபி கொடுத்தா அம்மா. பெரிய டம்ப்ளரில் தான். அதுவும் ஸ்டிராங்  டிகாக்ஷன். சிங்காரம் காபி சாப்பிட்டாச்சு. அம்மா  நீங்க காபி கொடுத்தா அது தனி ருசிதாம்மா. அம்மாவுக்கு அதுக்குன்னு இந்த புகழ்ச்சியெல்லாம் பிடிக்காதுன்னு நெனச்சுக்க வேண்டாம். அப்படி சந்தோஷப் பட்டுப்பா.

பெருமையை மனசுக்குள்ள அமுக்கி வெச்சுட்டு ரொம்ப அடக்கமா “அதுக்கென்ன சிங்காரம்! காபி போடறது ஒரு பிரமாதமும் இல்ல. எங்க வீட்டுல ஒரு குழாய் ரிப்பேர்,  இல்ல அடைப்புன்னா,  கூப்ட குரலுக்கு உன்ன மாதிரி வேற யாருப்பா ஓடி வருவா?   அதனால பேஷா வா! இல்ல சும்மாவே வா. எப்ப வந்தாலும் ஒருவா காபி உனக்கு தருவேன்

ஒருவா காபி.....ப்ளம்பருக்கு இன்னிக்கு...நேத்திக்கு எலெக்ட்ரீஷியனுக்கு!

நாளைக்கு வாட்ச்மேனுக்கு... நாளன்னிக்கு போஸ்ட்மேனுக்கு... அப்புறம் பக்கத்து வீடு.. எதிர் வீடு இருக்கவே இருக்கே... அபார்ட்மெண்ட்டுன்னா நாலு பேரு வருவாங்க போவாங்கதானே. நான் சத்தியமா பேச்சுக்கு சொல்லல இதை. உண்மையாவே எங்க வீட்டுல இப்படிதான்!.

அன்னிக்கு புதுசா காபி பொடி,  புது பால்,  லீவு நாள், ஞாயிற்றுக்கிழமை. யாருக்கு ‘முதல் காபி’ யோகம் அடிச்சது தெரியுமா?  மாசமொருமுறை மட்டுமே டாய்லெட் க்ளீன் பண்ண வரும் வீரய்யனுக்கு..

ஒரு வா காபி ........

அப்பா கிட்ட சொல்லி சொல்லி அலுத்துப் போச்சு. ஏம்பா கூலிதான் கொடுக்கறோமே?  இப்படி உபசாரம் பண்ணினீங்கன்னா சரியா வராதுப்பா..

"போகட்டும் பாவம்...அவங்கெல்லாம் நாம கூப்பிடறபோது ஓடிவந்து வேலை செஞ்சு தறாங்களே?”   இது அப்பா....அம்மா சொல்றாப்பலயே. 


அப்ப ம்மா மட்டும் பாவம் இல்லையா?    

ஒரு வா காபி கலந்து கொடுக்கறதுல எனக்கென்னடி கஷ்டம்”?  இது அம்மா... அப்பா கூட சேர்ந்து போடற ஜால்ரா. 

இவங்களை திருத்த முடியாது. விட்டுட்டேன். குடிச்சுட்டு போகட்டும்.

ஒரு வா காபி.....

நான் கல்யாணம் ஆகிப்போன பிறகு தான் எங்க வீட்டுல பண்ற அபத்தம் இன்னும் நல்லா புரிஞ்சது.

என் மாமியார் வீட்லெல்லாம்,  வீட்டு மனுஷங்களுக்கே கண்டிப்பா ஒரு நாளைக்கு ரெண்டு வேளை காபி தான். நெனச்சபடியெல்லாம் காபி போட முடியாது. மிஞ்சிப்போனா வேலைக்காரிக்கு ஒரு வேளை காபி ( தண்ணி டிகாக்ஷனில் ) . மத்த படி உறவினர் வந்தா உண்டு. அதுவும் சிலருக்கு முதல் டிகாக்ஷனில்,  சிலருக்கு இரண்டாவது. 

ப்ளம்பர் வாட்ச்மேனெல்லாம் வெளில அவங்களேதான் டீ, காபிலாம் பாத்துக்கணும். வீட்டுக்குள்ள வேலை முடிஞ்சுதுன்னா உடனே கெளம்பிடணும்...

அம்மாவீட்டு காபி கதை ஒரு நெடுங்கதை. கல்யாணம் ஆகி 18 வருஷம் ஆச்சு எனக்கு. எத்தனையோ தடவை அம்மாவ பாக்க போவேன்,  வருவேன்.  ஒரு மணியில் 2 காபியாவது குடுக்காம விடமாட்டா. எப்ப போனாலும் மொதல்ல காபி உபசாரம் தான்!

“ராதா....நிமிஷமா காபி கொஞ்சம் கலந்து தரேனே?”

அம்மா........ப்ளீஸ் காபி வேணுமான்னு மட்டும் கேக்காதே!  இன்னிக்கு ஏற்கனவே நிறைய குடிச்சாச்சுமா


காபியை ஆத்தி ஆத்தி சமையல் ரூமிலிருந்து நான் இருக்கற இடத்துக்கு கொண்டு வந்து தருவா. ஏம்மா இப்படி நடக்கறே

இது என்னடி நடை?  திரும்பினா ஹால்,  மேல ஒரு அடி வச்சா இதோ ரூம்

நமக்கெல்லாம் காபி குடிச்சாதான் தெம்புன்னா, அவளுக்கு காபி கலந்தாதான் தெம்பே!.  

அன்னிக்கு ஒருநாள் அம்மாவும்  நானும் கடைக்கு போயிட்டு வந்தோம்.

அம்மா..10 நிமிஷம் படுத்துக்கறேன். லேசா தலை வலிம்மா  படுத்தேன்

காபி தரட்டுமா?  இதப்பாரு...தலைவலின்னா ஒருவா காபி குடிச்சா பட்னு விட்டுடும் தலைவலி. என்ன டயட் கியட் ஏதாவது இருக்கியா?   காபி குடிக்கறதையே நிறுத்திட்டயா என்ன?  (  யாராவது அப்படி காபியை ஒரேதடியா நிறுத்திட்டா அவளால அந்த ஷாக்கை தாங்கவே முடியாதோ!? )  அதுக்குன்னு காபியே குடிக்காட்டாலும் தலைவலி வரும்

ம்...சரி குடும்மா

இந்த அம்மாக்கு காபி கம்பெனியோட என்ன ஒப்பந்தமோ தெரியல?  ஒரு  நாளைக்கு எத்தனை காபி கொடுத்தா எவ்வளவு கமிஷனோ?  காபி வேணுமா?  ஒரு வா காபி.... இப்படி கேக்கறது. வேண்டாம்னாலும் கொடுத்தே விடறது. அலுக்கவே அலுக்காதா? செலவைப் பத்தியும் கவலை இல்லையா?

குட்டித்தூக்கம் போட்டு கண் முழிச்சேன். மணந்தது காபி. அம்மா படுக்கையின் பக்கத்தில் நின்று கொண்டு காபியை ஆத்திக் கொண்டிருந்தாள்.

இந்தா.. ஒரு வா குடி... தலை வலி இன்னும் இருக்கா?  மூஞ்சி சரியே இல்ல பாரு

காபியைக் குடித்தேன் .

நேரமாச்சுமா. வரட்டுமா  

இன்னொருவா தரட்டுமா?  இந்தா சாப்டுப்போ

ம்ஹூம்......  மண்டையை ஆட்டிவிட்டு கிளம்பினேன்.

தலைவலி விடவில்லை. ஆனால் அது என் நினைவில் இல்லை. அம்மாவின் காபியையே நினைத்துக் கொண்டு நடந்தேன். ஒரு வா... அது என்ன?  ஒரு வாயா? ஒரு தடவை கூட ஒரு வா காபி குடித்ததில்லை யாரும். அது ஒரு பேச்சுக்கு, உபசாரத்துக்கு சொல்வது. ‘கொஞ்சம்’,    ‘ஒரு வா’ இப்படியெல்லாம் சொன்னா சட்னு குடிக்க சம்மதிச்சுடுவாங்க..

இது எல்லாமே நேத்துதான் நடந்த மாதிரி இருக்கு. இன்னிக்கு தேதில அம்மா போய்ச்சேந்து முழுசா ஒரு வருஷம் முடிஞ்சாச்சு.

நானும் தலைவலி வந்தா காபி கலந்து குடிப்பேன். காபி நினைவு போயிடும் உடனே.. தலைவலி நினைவு பாடா படுத்தும்... ஏன்னா அது என் காபி. அம்மா காபி இல்ல.

அம்மா கடைசி நாலு வருஷம் அண்ணனுக்கு உடம்பு வந்ததுலேருந்து தானும் மனசு ரொம்ப தளர்ந்து போயிட்டா. அவனுக்கு ஏதோ மனசு சம்பந்தப்பட்ட வியாதி. அம்மா மனசையும் சேத்து வறுத்தது அவன் உடம்பு.

என் நினைவு தெரிஞ்சதுலிருந்தே என் அண்ணா ஒரு காபி ப்ரியன். இல்ல இல்ல ம்மா  காபி சாப்பிடறயான்னு கேட்டு கேட்டுதான் இப்படி காபி ப்ரியம் அவனுக்கு அதிகமாயிருக்கும்! அவனுக்கு உடம்புக்கு வந்தாலும் வந்தது, எப்பப்பாத்தாலும்  அம்மா காபி,  அம்மா காபி ன்னு நச்சரிப்பான். மருந்து சாப்பிடுவான். தூங்குவான். அம்மாவும் இத்தனை காபி குடிக்காதேடான்னு சொல்றதுமாட்டும் சொல்லுவாள்... ஆனா மனசு கேக்காம,  கலந்து கொண்டு போய் கொடுத்துட்டே இருப்பா. நடையா நடப்பா. சமையல் உள்ளுக்கும்..ஹாலுக்கும்,  அவன் ரூமுக்கும்...மறுபடி ஹாலுக்கும்...சமையல் உள்ளுக்கும்...ரூமுக்கும்...அதான் தெரியுமே!. அண்ணா கொறஞ்சது ஒரு நாளைக்கு 20 காபி குடிப்பான்...

அண்ணனுக்கு உடம்பு சரியே ஆகாததால அம்மாவுக்கு கடைசில காபி கொடுக்கறது கூட கொஞ்சம் அலுத்துப் போச்சு. அதாவது அண்ணாவுக்கு காபி கொடுக்கறது மட்டும் தான் அலுத்தது. அப்பகூட நானோ வேற யாராவது போணோம்னா ஒரு வா காபி சாப்பிடறயான்னு கேட்டு குடுக்காம இருக்க மாட்டா..

எத்தனையோ தடவை அம்மா எனக்கு காபி குடுத்திருக்கா.. என்ன ஒரு 23,000 தடவை எனக்காக மட்டுமே கலந்திருப்பாளா?.  அப்புறம் என் பாட்டி, தாத்தா, எங்கப்பாக்கு, அண்ணனுக்கு அப்புறம் வருவோர்,  போவோர்....எல்லாம் சேத்து மொத்தமா ஒரு 5 லட்சம் தடவை காபி கலந்திருப்பாளா?  மேலயே இருக்கும். கின்னஸ்ல வரலைங்கிற குறை ஒண்ணு தான். 


அம்மா கை காப்பி போட்டதை அவ போனப்பறம்தானே இத்தனை விமரிசையா நெனச்சுப் பாக்கறேன். தலை வலி வந்ததுனால தானே நெனச்சேன்?  அப்படிதான் இருக்கும்! வரட்டும் எனக்கு அடிக்கடி தலைவலி.

18 வயசுல சுறுசுறுன்னு காபி கலந்து ஓடி ஓடி கொடுத்திருப்பா. 25 வயசுல விறுவிறுன்னு நடந்து போய் காபி கொடுத்திருப்பா. 45 வயசுல  கால் வலி அதிகமாப் போய்  நடை தளர்ந்தும் காபி கலந்து கொடுத்திருக்கா. உடம்பு முடியாத கிழவியானப்பறமும் நடையாய் நடந்து காபி கொடுத்திருக்கா.

ஒவ்வொருவருக்கும் காபி கலக்கும்போது தானும் ஒருவா குடிப்பா. அதுதான் உண்மையில் ‘ஒரு வாய்’ - ‘ஒரு வா’..... அத்தனை பிடிக்குமோ எங்கம்மாவுக்கு காபி..?

என் அம்மாவின் அம்மா எத்தனை முறை என் அம்மாவுக்கு, என் அம்மா மாதிரி காபி உபசாரம் செய்திருப்பாள்?

இல்லை  என் அம்மாவின் பெண்  நான்தான், என் அம்மாவுக்கு...என் அம்மா மாதிரியே எத்தனை தடவை காபி உபசாரம் செய்திருப்பேன்?  இதுவரை நான் வாழ்ந்த என் மொத்த வாழ்க்கையில் ஒரு 10 தடவை?!   அவ்வளவுதான்.  இதுதான் நான்!  அதுதான் அம்மா!

முற்றும்
Geetha
தேவதை , அக்டோபர் 16-31, 2011

ஹலோ... நான் அம்மா பேசறேன்!

சிறு கதை    



அன்று


நான்தாங்க கமலா.  ராதாவோட அம்மா. வயசு 75 .

காத்தாலேருந்து எனக்கு ஒரே தவிப்பா இருக்கு. ராதா ஏன் இப்படி போனையே எடுக்க மாட்டேங்கறா? ஒரு நாளப் போல தினமும் அப்படி என்ன வேலை? என்ன பிஸி?  பொடலங்கா 
பிஸி?  அம்மா கிட்ட ரெண்டு வார்த்தை பேசக்கூட நேரமில்லாம?

அட! என்ன ஆச்சர்யம்?  போனை எடுத்துட்டாளே!


‘ஹலோ.. ராதாவா?  நான் தான் பேசறேன்.. இதோ பாரு முக்கியமா ஒரு விஷயம் பேசணும்னு போன் பண்ணினேன். அப்பறம் பேசறேன்னு போனை வச்சுடாதடீ ராதா ப்ளீஸ்’.   


“சரிம்மா. சொல்லு. சட்டுனு முடி”.

‘கழுத்துல லேசா வீங்கியிருக்குன்னு சொன்னியே?  உடனே டாக்டரைப் போய்ப் பாரு’.

“ம்.....பாக்கறேன்

‘மத்த எல்லா விஷயம் மாதிரி இதையும் தள்ளிப்போடாதே. நீ எதையுமே கவனிக்காம எப்ப பாத்தாலும் வேலை, புருஷன், குழந்தைன்னு ஒரே ஓட்டமும் டென்ஷனுமா  இருக்கே. உன் ஒடம்பைப் பத்தி தான் எனக்கு கவலை.’

“இப்ப எனக்கு வர்ஷாவை ட்யூஷன்லேருந்து கூட்டிட்டு வர கவலை

‘கழுத்துல வலி ஏதாவது இருக்கா?

பாத்தியா? முக்கியமா ஏதோன்னு பாத்தா நீட்டி முழக்கி சொன்னதையே சொல்லிட்டு இருக்க?  நான் பாத்துக்கறேம்மா. இப்ப நீ வை போனை. மத்தியானமா நிதானமா பேசறேன். என்ன?

‘ம்..தெரியும். போதும் போதும். இது வரைக்கும் எத்தனை மத்தியானம் போயாச்சு?  எத்தனை தடவை எனக்கு போன் பண்ணி நிதானமா பேசியிருக்கே?!’

“அய்யோ.. அம்மா டாட்டா பை பை. வச்சுடறேம்மா. கண்டிப்பா அப்பறம் போன் பண்றேம்மா. ஐ லவ் யூ....

பட்டென போன் மறுமுனையில் கட் .

ஆமாமா சீச்சீ?  யாருக்கு வேணும் இந்த ஐ லவ் யூ கண்றாவியெல்லாம்? பத்து நிமிஷம் பேசினா கொறஞ்சா போயிடுவா? ரொம்பத்தான் பண்ணிக்கறா?  என் புலம்பல்,  என் கோவம் இதெல்லாம் இவளுக்கு எங்க புரியப் போகுது?

இந்த மாதிரி எத்தனை தடவை பெத்த பொண்ணுகிட்ட,  என் செல்ல மகள் கிட்ட பேசணும்னு நான் துடிச்சிருக்கேன் தெரியுமா?  பல நாள் ராத்திரில ஏதாவது மனக்குழப்பம் இருந்தா தூக்கமே வராது.  நானும் விடாம போன் பண்ணுவேன்.  ஆனா ஒரு நிமிஷத்துக்கு மேல அவ பேச மாட்டா.  அவ வீடு 10 கிலோமீட்டர் தூரத்துல தான் இருக்கு.  இருந்தாலும் என் ஒடம்பை வச்சுக்கிட்டு அடிக்கடி அங்க என்னால போக முடியல.  எனக்கும் பொறுப்புகள் இருக்கே!.  அவ வரதும் முடியாது.  அவ பிசியைப் பத்திதான் உங்களுக்கு தெரியும்.  பாவம் அவ.

சரி.  கெடக்கட்டும், போகுது போங்க.  சின்னப்பொண்ணுதானே?  அவ எங்க போகப் போறா ?  இல்ல நான்தான் எங்கப் போகப் போறேன்?  ஒரு நாள் இல்லாட்டி இன்னொரு நாள் நிறையப் பேசுவான்னு நெனச்சேன்.


அப்படி நெனச்ச கொஞ்ச நாளுக்குள்ள, எனக்கு திடீர்னு ஒடம்பு மோசமாப்போய் ஒரு மாசம் நான் படுத்த படுக்கையாயிட்டேன்.  சும்மா சொல்லக்கூடாது.  என்னைச் சுத்தி இருந்தவங்களை ஒரு ஆட்டு ஆட்டி வச்சுட்டேன்.   ஆனா டாக்டர், ஆஸ்பத்திரி, ஊசின்னு வலிகள் ஆயிரம் இருந்தாலும், ஆஹா!! எதைன்னு சொல்வேன்?  என் மக ராதா என்னை அடிக்கடி வந்து பாத்ததை சொல்றதா?  இல்ல ஜூஸ், கஞ்சி, இட்லின்னு மாத்தி மாத்தி கொண்டு வந்து கொடுத்ததை சொல்றதா? இல்ல என் ஒடம்பை தொடச்சு விட்டதை சொல்றதா?

முக்கியமா ராதாவோட பிஸிக்கு நடுவுல கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் படுக்கையிலேயே நிகழும் என் பாத்ரூம் இத்யாதி வேலைகளை கவனிப்பா பாருங்க.  எந்த நர்ஸும் ஈடாகாதுங்க. பாவம் அவ. 

தினம் நிதானமா என்கூட மணிக்கணக்கா பேசினா.  அப்பா! எத்தனை வருஷம் ஆச்சு இப்படிப் பேசி? எத்தனை மாசமாச்சு இப்படி மகளின் அருகாமையை அனுபவித்து?   ‘அம்மா சட்டுனு போனை பேசி முடின்னு அவ எப்போதும் சொல்றது ஞாபகம் வரும்.  உடனே நான் தான் அவ வேலைகளைப் பத்தி ஞாபகப் படுத்தி அவளை அனுப்புவேன்.

என் பொண்ணு தினமும் வரா,  என் கூடப் பேசறான்னு நெனச்சு படுக்கையிலேயே நான் கெடக்க முடியுமா?  நல்லா இருக்கே நீங்க சொல்றது?! என் குழந்தை கஷ்டப் படறது எனக்கு தாங்கல.

பொழுது விடிஞ்சது. அன்னிக்கு நல்ல நாளா இருந்தது.

ராதா என் பக்கத்துல வந்து,  எப்போதும் போல எனக்கு பிடிச்ச அனுராதா ஸ்ரீராம் பாட்டை டேப்பில் போட்டு என்னை கேக்க வச்சா! நான் வலியில் அழுவதைப் பார்த்து அவளும் துடிச்சா.  ஒரே ஒரு முக்ய வேலை இருக்கு. திரும்ப மதியம் வரேம்மான்னு சொல்லிட்டு ராதா வீட்டுக்கு போயிட்டா.  அடுத்த சில மணி நேரங்கள் என்ன நடந்ததுன்னே எனக்கு தெரியாது.

அதான் சொன்னேனே, அன்னிக்கு நாள் ரொம்ப நல்லா இருந்ததுன்னு.  ராதா அடிக்கடி சொல்றாப்பல, ‘சட்டுனு முடிச்சுக்கிட்டேங்க நான் அந்த நொடில. அதாங்க என்னோட இந்த உலக வாழ்க்கையை சொல்றேன்.


இன்று

நான் லேட் (late) கமலாங்க இப்போ.

ஆனா பாருங்க.  என்னால பாக்க சகிக்காத ஒரு காட்சிங்க.

அதோ...

போன் கிட்டயே என் பொண்ணு ராதா உட்கார்ந்துகிட்டு இருக்கா.  நான் போன் பண்ணுவேன்னு வெயிட் பண்றாங்க.  போன் பேச எப்படிதான் நிறைய நேரம் கெடச்சதோ தெரியல.   அசடு!. அசடு!. என்னால எப்படி அவளுக்கு போன் பண்ண முடியும்?

அவ போன் நம்பர் அப்பவே மாறிப்போச்சே!  புது நம்பர் எனக்கு தெரியலயே!

யாராவது ப்ளீஸ்... ராதாவோட நம்பர் தெரிஞ்சா எனக்கு சொல்றீங்களா?  ராதாவை பாத்தா பாவமா இருக்குங்க. சத்யமா வளவளன்னு பேசமாட்டேன். சட்டுனு ரெண்டே வார்த்தைல பேசி முடிச்சுடறேங்க.

இல்லாட்டி நீங்களாச்சும் அவ கிட்ட சொல்றீங்களா? எப்போதும் ஐ லவ்யூனு உங்கம்மா கமலா சொல்லி விட்டாங்கன்னு கொஞ்சம் ராதா கிட்ட சொல்றீங்களா? ப்ளீஸ்?...

முற்றும்    
Geetha
Published: சூரிய கதிர், அக்டோபர் 1-15, 2011, பக்கம் 52,53