Wednesday 24 August 2011

ஜிமிக்கி


சிறு கதை




எவ்வளவு முயற்சி செஞ்சாலும் தோல்வி!! அசாத்திய கவனக் குறைவு எனக்கு!

நான் தாங்க... வாசு... ஆபீஸிலிருந்து வீட்டுக்கு போய்க் கிட்டிருக்கேன்.  என் ஸ்கூட்டர்லதான்அப்பப்ப இப்படித்தான் நானே ஏதாவது புலம்புவேன்.  அட ஆபீஸைப் பத்தி இல்லீங்க!

இன்னியோட எனக்கு கல்யாணம் ஆகி 10 வருஷம் முடிஞ்சாச்சுங்க! என்னைப் பொருத்தவரை இன்னிக்கும் நேத்திக்கு மாதிரி இன்னொரு நாள். அவ்வளவு தான்.

ஆனா அப்படி இருக்க முடியுமா? உலகத்தோட ஒத்து வாழணுமில்லையா? அதான் மனைவி மெச்சற மாதிரி இருக்குமா பரிசுன்னு ஒரே யோசனைங்க!!

புடவை,  நகையெல்லாம் சரிப்படாது.  ஏன்னா இதெல்லாம் முன்ன பின்ன கடைக்குப் போய் வாங்கி பழக்கம் இருந்தாதானே?  இல்ல புடவைகளில் இருக்கற வகைகளைப் பத்தியாவது தெரிஞ்சாதானே?   சரி வேற யாரையாவது விட்டு வாங்கலாம்னா எப்படித்தான் முடியுமோ அவளால? யாரு வாங்கினது? எந்தக் கடைன்னு மொதக்கொண்டு சரியா கண்டு பிடிச்சுடுவா!

என் கவனக் குறைவை நெனச்சா எனக்கே சிரிப்பு வரும். ( சமயத்துல அழுகையும் வரும் ) இன்னிக்கி காத்தால நடந்த ஜிமிக்கி விஷயத்தைப் பத்தி கடைசியா சொல்றேங்க.

அதுக்கு முன்னால வேற ரெண்டு விஷயம் பத்தி சொல்றேன்.

அன்னிக்கி ஒரு நாள் சாயங்காலம் என்னாச்சுன்னா.....

எங்க ஆபீஸ் சம்பந்தமா ஒரு பார்ட்டி. 5 நட்ஷத்திர ஹோட்டலில்.  என் பாஸ் தவிர வேறு பல வி.ஐ.பிக்களும் கலந்துப்பாங்க.  நானும், என் மனைவியும் கிளம்பறோம், அப்பத்தான் அவ கட்டியிருந்த புடவையை கவனிச்சேன். ( என் ஆபீஸ் பார்ட்டியாச்சே!)

சாணி நிறத்தில் மிக மங்கலாக இருந்தது.  அது 20 வருஷ பழைய புடவை. நான் கேட்டேன் அவ கிட்ட ( சில வார்த்தைகளை மட்டும் மனைவி கிட்ட சட்டுனு விட்டுட கூடாதுன்னு எத்தனை முறை என் நண்பர்கள் அடிச்சுகிட்டாலும் எனக்கு புத்தி கிடையாது. )

‘இன்னிக்கின்னு பாத்துதான்  இந்த புடவையை கட்டிக்கணுமா?  எத்தனை முக்கியமான பார்ட்டி தெரியுமா?’ ன்னு கேட்டேன். ஒரே வரில ‘நான் வரல உங்க கூட’ன்னு சொல்லிட்டு விருட்டுன்னு உள்ளே போயிட்டா.  இந்த பார்ட்டிக்கு அவளும் வந்தாகணும்.

ஏற்கனவே லேட்டு.   இன்னும் லேட்டாகிட்டே இருந்தது.

பத்து வருஷ அனுபவஸ்தனா லட்ஷணமா சமாதானம் பண்ணினேன்.

எனக்கு நிறைய விஷயங்கள் அந்தப் புடவையப் பத்தி எடுத்துச் சொன்னா!!

கடகடன்னு சொன்னா! அழகா சொன்னா!  சும்மா படிங்க. பத்து பாயின்டுக்கு ஒரு பாயின்டு தாங்க கம்மி.

1.
இது கிரேப் ஸில்க் புடவை
2.
அவளே வாங்கிக் கொண்டது !
3.
புடவை விலை ரூ. 4000 ( அய்யோ !!!)
4.
வாங்கி 8 மாதம் தான் ஆகிறது !!
5.
இதுவரை...ஒரே முறை தான் உடுத்தப்பட்டுள்ளது !!
6.
மாலை வேளைகளில் போகும் விழாக்களுக்கு இப்படித்தான் லைட் கலரில் உடுத்தணும்.
7.
புடவை லைட் கலராவும், கழுத்துல முருங்கைக்காய் அகலத்துல கலரா ஒரு மணியும் போட்டா ரொம்ப நல்லா இருக்குமா அவளுக்கு (கழுத்தை அப்பதான் கவனிச்சேன்!)
8.
அடிச்சு சொன்னா ( வாயாலத்தான் )  ஒரு நாலு பேராவது புடவையைப் பத்தி பார்ட்டில கேப்பாங்கன்னா (அப்புறம் ராத்திரி, கேட்டவங்க அஞ்சு பேரோட பெயர்களைச் சொல்லி அவ நிரூபனமும் செஞ்சுட்டா. )
9.
ஷர்ட் செலெக்ஷன் பத்தியும் தெரியாது, புடவையைப் பத்தியும் ஒண்ணும் தெரியாது.  ( இது என்னைப் பத்தின அவளோட (சரியான) அபிப்ராயம் )

கிளம்பிப் போயிட்டோங்க அப்பறம். ஏன்னா அவளுக்கு தெரியும் வீட்டுல அன்னிக்கு சாயங்காலம் சமையல் கிடையாதுன்னு.

இன்னொரு நாள் என்னாச்சு தெரியுமா?  கிளிப் பச்சை நிறத்துல பள பளன்னு ஒரு புடவை கட்டியிருந்தா.

‘புது புடவையா?  என்ன இன்னிக்கு? என்ன விசேஷம்?’  நாந்தாங்க கேட்டேன்.

சட்டுன்னு என் குட்டிப் பொண்ணும் மனைவியும் சிரிப்பா சிரிச்சாங்க என்னைப் பாத்து.  இது வரைக்கும் 100 தடவை கட்டியிருப்பாளாம் அந்த சில்க் காட்டன் புடவையை. அப்படி ஒரு பழசாம். நான் ஏன் ஒரு தடவை கூட பாத்ததில்லை? பார்ட்டிக்கு அப்பறம் இது நடந்ததால எனக்கு கெடச்ச வசவு, நான் பழசை புதுசுன்னும்,  புதுசை பழசுன்னும் சொல்லுவேனாம்.

ஸ்கூட்டர்ல தான் போயிட்டிருக்கேன். சிக்னல்ல நிக்கறேன். இன்னும் பத்து நிமிஷத்துல வீடு வந்துடும்.

இன்னிக்கு மார்ச் ஒன்பதாம் தேதிங்க. எங்க கல்யாண நாள். என் பொண்ணு வரைஞ்சு கொடுத்த வாழ்த்து அட்டையும், மனைவி வாங்கின புது சட்டையும் என் ரூம் மேசைமேல் பார்த்த உடனே தான் அதுவும் ஞாபகம் வந்தது.

சட்டையை போட்டுகிட்டேன்.  நல்லா இருக்குன்னும் சொன்னேன்.

சாயங்காலம் கோவிலுக்கு போலாமான்னா.  ம்....சீக்கிரம் வரேன்னு சொல்லிட்டு டிபன் சாப்பிட ஒக்காந்தேன்.

அப்பதாங்க கவனிச்சேன். அன்னிக்கு கூடுதல் அழகா இருந்தா.  தலைக்கு குளிச்சு, அப்பறம் புதுசா ஒரு ஜிமிக்கி போட்டிருந்தா.  குட்டியா ஒண்ணு. ரொம்ப அழகா இருந்தது. அதாவது அந்த ஜிமிக்கி என் மனைவிக்கு அத்தனை பொருத்தமா இருந்துச்சு.  நெஜம்மா அழகா இருந்தா.  சொன்னேன் மனசுல பட்டதை அப்படியே.....
‘ஏய் அந்த ஜிமிக்கி ஒனக்கு ரொம்ப அழகா இருக்கு’.

‘அட புதுசா?’ ன்னும் கேட்டேன். பெருமை வேற எனக்கு!

(அழகுன்னு சொன்னா பத்தாதா? அதுக்கு காரணும் சொல்லி மறுபடியும் மாட்டிக்கணுமா? ) கடமைக்கு சொல்றோம்னு பாதி சமயம் கண்டு பிடிச்சுடராங்க ! உண்மையா சொன்னாலும் மாட்டிக்கறவன் நான் ஒருத்தனாத்தான் இருப்பேன்!

ஜிமிக்கி பத்தி எனக்கு புரிய வெச்சா. அவ முகம் கோவத்துல ஜிவு ஜிவுன்னு இருந்தது.

1. மூணு மாசமா அந்த ஜிமிக்கி அவ காதுலதான் இருக்காம். ( என் முகத்துல வழிஞ்சதை நல்ல வேளை நீங்க பாக்கலை)
2.
இன்னிக்குதான் கழட்டிட்டு, கல்யாணா நாளாச்சே புதுசா வேற தோடு மாத்திக்கலாம்னு நெனச்சாளாம்.
3. 50
வருஷப் பழசாம்,
4.
அது அவள் பாட்டீதாம்.
5. மூணு மாசமா நான் ஒண்ணும் சொல்லாம,  கல்யாண நாள் அன்னிக்கு பேருக்கு புகழ்ந்துட்டேன்னு அவ நெனைக்கறா. (கோவம் ஞாயம் தானே?)
க்ளைமாக்ஸுக்கு வருவோம்.....

சரி ஒரு வழியா என்ன பரிசுன்னு நண்பர்கள் உதவியோட முடிவெடுத்தேங்க. நாள் பூரா இதே வேலை தான் ஆபீஸ்ல. ( நேரம் வேஸ்டே இல்லை. ஏன்னா இந்த அனுபவம் வாழ்க்கைல அவங்களுக்கும் உதவியா இருக்கும் ! )

என் மனைவிக்கும் தகவல் சொல்லிட்டேன். பதில் ஏதும் வரலே.

சாயங்கால காட்சி.  த்ரீ இடியட்ஸ் சினிமா. நாங்க ரெண்டு பேர் மட்டும். அவ அந்தப் படம் இன்னும் பாக்கல. கல்யாணாம் ஆன புதுசல சேந்து சினிமா போனதுதான். அதனால் இந்தப் பரிசை பிடிச்சுடும்னு நெனைக்கறேன்.

இதோ நான் ஒரு மணி நேரம் முன்னாலயே பெர்மிஷன்ல கெளம்பி போறேன்.  தயாரா இருப்பாளா?  

வீடு வந்தாச்சு.....

அட குழந்தைக்கு ஏதோ ஏற்பாடு பண்ணிட்டு வீடப் பூட்டி வாசல்லேயே நிக்கறா! எனக்கு காபி கூட கிடையாதா? அவ கட்டியிருந்த புடவை, அய்யோ வேணாங்க. அது எதோ ஒண்ணு இப்ப எதுக்கு அது ?

அவள் வாய் முழுக்க சிரிப்புங்க. அட எனக்கும் அவளை மாதிரியே புரியுதுங்க அதுவும் பாயின்ட் பாயின்டா.

1.
அட அவ சந்தோஷம் ஒரு சினிமா தானா?
2.
நான் கூட போணும் அவ்வளவு தானா?
3.
என் ஆவலை தெரியப்படுத்தற மாதிரி நானே டிக்கெட் வாங்கணும் !
4.
அவளுக்கு எந்த முக்யமான வேலையும் இல்லாத நேரத்தை தெரிஞ்சுக்கணும்.
5. அப்ப அதை அவ எதிர் பார்க்காமலும் செய்யணும் !
6.
அதுவும் பிறந்தநாள், கல்யாண நாள் அன்னிக்குன்னா ரெட்டிப்பு மகிழ்ச்சி.

நாங்க கிளம்பணுங்க.  என் புலம்பலை இத்தோட நிறுத்திக்கிறேன்.

சிரிச்சுகிட்டே, வண்டியை நிறுத்தச் சொல்லி கையை ஆட்டினா.

இதோ என் மனைவி வத்சலாவோட ஜிமிக்கியும் சேர்ந்து அழகாக சிரிக்கிறது.

வர்ரேங்க. 

முற்றும்.
Geetha
Published: Vikadakavi, 2018

Tuesday 23 August 2011

புது டில்லியில் ரெண்டு நாள்


ஜாலி ட்ரிப்

1. எங்க தூங்கறது?

எங்கள் குடும்பம் முழுதும் ஒரு விசேஷத்திற்காக புது டில்லிக்கு போகவேண்டி இருந்தது. விசேஷம் வெள்ளிக்கிழமை அரை நாள்தான். அடுத்து சனி ஞாயிறு சேர்வதால் இரண்டு நாட்கள் கூட இருந்து டில்லியை சுற்றிப்பார்க்க ஏற்பாடுகள் செய்து கொண்டோம். டெல்லி ஒன்றும் பார்க்காத புது ஊரில்லை. இருந்தும் குழந்தைகளுடன் சேர்ந்து என்பது ஜாலிதானே? ( யாருக்கு ஜாலி?! ) பார்க்கத்தானே போகிறோம்! மும்பையிலிருந்து தம்பி குடும்பமும்,  மற்றவர் அனைவரும் சென்னையிலிருந்தும் கிளம்பி டில்லி போய் சேர்ந்தோம்.

வெள்ளி விசேஷம் முடிந்து பெரியவர்கள் சென்னை திரும்பி விட்டனர். சிறியவர்கள் நாங்கள் மட்டும் டில்லி ஹோட்டலில். சிறியவர்கள் என்றால் 4, 8, 10 16 வயதிலிருந்து  38, 41, 45, 50 வயது வரை உள்ள நாங்கள் எல்லோரும்.

நாங்கள் 8 பேர். யார் யார் ? ( 10 பேருக்கு சமம். எந்த குடும்பத்தில் அந்த +2 என்பது சஸ்பென்ஸ்! )

அண்ணன் குடும்பம்
அண்ணன் ராஜன் (என் கணவர்) ,
நான் கிரிஜா 
மகள் வினிதா 16
மகன் விஷால் 10 
நாங்கள் சென்னை வாசிகள்.  

தம்பி குடும்பம்
தம்பி ப்ரபா ( கணவரின் தம்பி)
மனைவி ப்ரீதா
குழந்தைகள் வர்ஷினி 8, வாசினி 4
இவர்கள் மும்பையில் இருப்பவர்கள்.


வெள்ளி இரவு பதினொரு மணி வரை எங்களுக்குள் எதுவும் பேசிக்கொள்ள நேரம் கிடைக்கவில்லை. அதாவது அடுத்த 2 நாட்களும் எங்கெல்லாம் சுற்றப் போகிறோம்? என்ன பார்க்கப் போகிறோம்? எந்த வண்டியில்? இந்த ஹோட்டலிலேயே தங்கப் போகிறோமா? இல்லை வேறு மாற வேண்டுமா? அப்படி என்றால் எங்கு? இப்படி சில விஷயங்கள் இருக்குமல்லவா? மறு நாள் விடியற்காலை எத்தனை மணிக்கு கிளம்ப வேண்டும்? ஆக்ரா உண்டா இல்லையா?

ஆனால் தம்பி ப்ரபாவிடம் மட்டும் டைப் அடிக்கப்பட்ட ஒரு ப்ரோக்ராம் ஷீட் இருந்தது. அது ப்ரபாவே மண்டையைக் கசக்கி, லேப்டாப்பை உலுக்கி, இண்டெர்னெட்டை குடைந்து, நாலைந்து ப்ரிண்ட் அவுட் சரியாய் வராமல், கடைசியாய், ஒரு வழியாய் ஒரு ப்ரிண்ட் அவுட் ஒழுங்காய் வர, அதிலும் மனைவி ப்ரீதாவின் விருப்பப்படி சில இடங்களை முன்னாலும் பின்னாலும் மாற்ற வேண்டியிருந்து, மாற்றி வேற புதிய பிரிண்ட் அவுட் எடுத்து, ஒரு வழியாக கஷ்டப்பட்டு ப்ரபாவின் டில்லி ப்ரோக்ராம் பளீர் வெள்ளைத் தாளில் பளிச் ரெடி!

இதே ஹோட்டல்தான் என்று நானே என் மனதில் தீர்மானித்துக் கொண்டேன். ஏனென்றால் அதைப் பற்றி வேறு யாரும் பேச்சு எழுப்பவில்லை. இரண்டு அறைகள் 8 பேர். என்ன படுத்து என்ன? மணி ராத்திரி பன்னிரெண்டு. குழந்தைகள் ஒன்றாக தூங்க விருப்பப்பட்டன.  

யார் எங்கே படுப்பது?  இதோ......ஒரே நொடி.......ஆரம்பம் குழப்பம்....

ப்ரபா: இந்த கீழ் ரூமில் நானும் பசங்களும் படுத்துக்குறோம்.

நான்:  5 பேரா? எப்படி பசங்களே 4 பேரு? ஒரு எக்ஸ்ட்ரா பெட் போட்டாலும் 4 பேர் தான் படுக்க முடியும்.

வர்ஷினி(8): நான் வினிதா கூட படுத்துக்கணும்

வினிதா(16): அம்மா, பெரியவங்க எல்லாரும் மாடி ரூமுக்கு போங்க. நானும் பசங்களும் இங்க. அப்ப சரியா வருமே.

ராஜன்: அது சரியா வராது 4 பெரியவங்க. ஆனா ஒரு எக்ஸ்ட்ரா பெட் தானே இருக்கு! அதே ப்ராப்ள்ம்

வினிதா(16): இல்ல லேடீஸ்லாம் ஒரு ரூம்?

ப்ரபா:  நல்ல ஐடியாவா இருக்கே.?  நாங்க மூணு பேர்தான்  பாய்ஸ்..

விஷால்: ஹையா! எங்களுக்கு இடம் நெறய இருக்குமே..

ராஜன்: ஆமா. ஒரு நாள் நிம்மதியா உன் கிட்ட ஒதை வாங்காம படுக்கலாம்.

விஷால்(10): அப்படீன்னா நான் உன்னை ஆசையா கட்டிகிட்டு கிட்டக்க தான் படுத்துப்பேன்..

புரிஞ்சு போச்சு இல்ல? இனிமே  நீங்களே ஃபில் அப் பண்ணிக்கோங்க....

நான்:.................................................................................................................................................................................
விஷால்(10): ............................
ப்ரபா: .......................................................................................................
ராஜன்:.......................................................................................................................
ப்ரபா: இல்ல....நான் மேல போய் ப்ரீதா கிட்ட கேட்டுட்டு வரேன்

(இதை மொதல்லயே செஞ்சிருக்கலாம்!)

அவன் குழந்தைகள் வர்ஷினி, வாசினியும் கூடவே ஓடினார்கள்.  ப்ரபா திரும்பி வரல.


வினிதா(16): (16 வயசு  எல்லாமும் அறிந்து ஆராயும் வயசு - மனோதத்துவ படிப்பாளி போல ) அப்பா ஏம்ப்பா இப்படி? ஒன்ணுமில்லாத விஷயத்துக்கு போய் இத்தனை டிஸ்கஷன் 6, 7 பேர் பேசியும்...ஒரு முடிவும் எடுக்கல. இந்த பெரியவங்க எல்லாருமே இப்படிதான் இருக்கீங்க!

ராஜன்: ஹாஹ்ஹாஹ்ஹா........

( சிரிப்புதான்.... வேறென்ன.... அவர் பெரியவங்கள்ல சேத்தி இல்லை!?)

நான்: மணி ஒண்ணு. தூக்கம் வருது. ஏதாவது ஒரு முடிவு சொல்லுங்களேன்.

சிறிது நேரத்தில் நைட் ட்ரெஸ்ஸில் வர்ஷினி மட்டும் ஓடி வந்தாள்.

நான்: என்ன யார் எங்க தூங்கப் போறீங்க? முடிவாச்சா?

வர்ஷினி(8): எனக்கு நோ ப்ராப்ளம் பெரியம்மா. நான் எங்க வேணும்னாலும் தூங்க ரெடி. ( இவ தான் மொதல்ல பசங்க எல்லாரும் ஒரு ரூம்ணு சட்டம் போட்டவ.. அதாவது கொழப்பத்தை ஆரம்பிச்ச மேதை) மொதல்ல கீழ நீங்கெல்லாரும் பேசிப்பேசி.. knock out  பண்ணினீங்க.  இப்ப மேல எங்கப்பாவும், அம்மாவும் பேசிப் பேசி.... knock out பண்ணினாங்க. ஆனா இப்ப சண்டை நடக்குது அங்க......சரி எங்க ஃபேமெலி மேல் ரூம். ராஜ் பெரியப்பா ஃபேமெலி இந்த ரூம்.

மும்பைக்காரியாச்சே... அம்மாடி knock out அது இதுன்னு என்ன தெளிவுடாப்பா? அது சரி! முடிவு இவளுதா? இல்ல இவ அம்மாதா? காத்தால ப்ரீதா கிட்ட கேக்கணும்!

வர்ஷினி(8): வா வாசினி போலாம்.


வாசினி (4): ம்..ஹூம்... நான் விஷால் அண்ணா கூடதான் இருப்பேன்...

சொல்லித்து மொதல்ல......ஆனா ஏதோ நினைத்துக் கொண்டு அக்காவுடன் மேலே ஓடிப்போய்விட்டாள் . ( அப்பா அம்மா சண்டையை நினைத்துத்தானோ என்னமோ?)

ராஜன்: நான் அப்பவே சொன்னேனே.. அவங்க அவங்க ஃபேமெலியா படுத்துட்டா குழப்பமே இல்லேண்ணு!

அட ராமா? இவர் சொன்னாராமா? எப்ப சொன்னார்? யார் கிட்ட சொன்னார்? சொல்லியிருந்தா தேவலையே. ஒண்ணரை மணிக்காவது தூங்கியிருக்கலாம். மணி இப்படி 2.30 ஆயிருக்காது. காத்தால கேட்டுப்போம். ஆனா கேக்காம விடமாட்டேன்.

வினிதா(16): அம்மா நான் உன் கிட்ட...

விஷால்(10): இல்ல நான் தான் அம்மா கிட்ட படுத்துப்பேன்

இப்ப எங்க குடும்ப சண்டை ஆரம்பிச்சது .

இதுக்கும் ராஜ் (மனசுல நெனச்சதுதான்) சொன்ன மாதிரியே, அவரை எக்ஸ்ட்ரா பெட்ல தள்ளிட்டு. நாங்க மூணு பேரும் பெரிய் பெட்ல.  அதாவது  நான் பசங்களுக்கு நடுவுல.

இண்டெர்காம் அடிச்சது. மறு நாள் ப்ரோக்ராம் பற்றி போனில் ராஜிடம் ப்ரபா சொன்னார். அண்ணன் தம்பி சண்டையின் சிறிய ட்ரெயிலரைப் பார்த்தோம்.

காத்தால 8 மணிக்கு ரெடியா இருக்கணும்னு மட்டும் ராஜ் எங்ககிட்ட சொன்னார்.

விஷால்(10): மொதல்ல எங்கப்பா போப்போறோம்?

 ராஜ்: காத்தல சொல்றேன்

நான்: காத்தால எங்களுக்கே தெரிஞ்சிடும். நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம்.

ராஜ்: இல்லடீ.... லன்ச் சாப்பிட சவுரியமான ஹோட்டல் பக்கத்துல இருக்கணுமாம். அதனால எங்க மொதல்ல போலாம்ணு  டிரைவர் கிட்ட காத்தாலதான் கேக்கணுமாம்.

அது சரி? அப்ப தம்பி ப்ரபா ரொம்ப கஷ்டப்பட்டு ப்ரிண்ட் அவுட் எடுத்த நீளமான ப்ரோக்ராம் ஷீட்?!!

ஒரு வழியா தூங்கிட்டோம்.


2. காலை டிஃபன்

காத்தால எப்படியோ எழுந்துட்டோம். மாடி ரூமிலிருந்து வர்ஷினி வந்தாள். எல்லோரையும் அவள் அப்பா ப்ரபா 8.30க்கு தயாராக இருக்கச் சொன்னதாக சொன்னாள். காத்தால எங்கு? என்ன பார்க்க போகிறோம் எனும் என் மகனின் சந்தேகத்தை தீர்த்து வைத்தாள். சரவணபவனுக்குத் தான் முதலில் டிபன் சாப்பிடப் போகப் போறோம்.

அது சரி! அப்ப ப்ரிண்ட் அவுட் ப்ளான்?

யார் முதலில் குளிப்பது? அதாவது சட்டென ஒரே நிமிடத்தில் (நன்றாக) குளித்து முடிப்பவர்கள் முதலிலா? இல்லை 20 நிமிடங்கள் எடுத்து ( நன்றாக) குளித்து முடிப்பவர்கள் முதலிலா? சிலரை 10 நிமிடங்களாக குறைக்கச் சொல்லி மன்றாடியபின் காலைக் குளியல்கள் நிறைவேறின...

காபி, டீ, பூஸ்ட், பால் குடித்து ஒரு வழியாக ரெடியாகி 8.45க்கு வாசல்ல நாங்க ரெடி. எங்களுக்காக ப்ரபா எற்பாடு செஞ்சிருந்த பெரிய டெம்போ வண்டி ரெடி... அடேங்கப்பா என்ன ஏற்பாடு! உள்ளே ஏறி உட்கார்ந்தோம். என்ன சவுகரியம்? எத்தனை பெரிசு? நல்ல கூலா ஏ.சி. டில்லியின் சுளீர் வெய்யிலுக்கு ஏற்றமாதிரிதான் இருந்தது. ஒரு  நாளைக்கு 4000 ரூ வாடகை இருக்குமோ? டீசல்?

( எதுக்கு இத்தனை பெரிய வண்டின்னு தோணினாலும்... ஏற்பாடு பண்ணினவங்கிட்ட நல்லதா இரண்டு வார்த்தை சொல்லிடறது நல்லது ....அவனும் யாரும் ஒண்ணும் சொல்லலியேன்னு நெனைக்க மாட்டானே! )

நான்: சூப்பர் ப்ரபா...உன் ஏற்பாடு

ப்ரபா: நல்ல சவுரியமா இருக்கட்டும்ணு ஏற்பாடு பண்ணினேன்.

ராஜ்: வெரி...குட்!

(அட இவர் கூடவா? பரவால்லயே... சரி தம்பி கூட இந்த ட்ரிப்ல சண்டை கிடையாது போலிருக்கே!)

விஷால்(10) : சித்தப்பா நான் உங்க சீட்டுல ஒக்காந்துக்கறேன்

வர்ஷினி(8): அப்பா  நாந்தான் அங்க ஒக்காந்துப்பேன்

ராஜ்: விஷால் மொதல்ல கேட்டான் இல்லையா? அவனே அங்க ஒக்காரட்டும்.

ப்ரபா: இல்ல நான் எழுந்துக்க மாட்டேன் . டிரைவர் சீட் பக்க்கத்துல இருந்தாதான் ரூட் பத்தி செக் பண்ண முடியும்.

4 சீட் எக்ஸ்ட்ராவா இருந்தும்.....யார் எங்க உட்காருவதென்று வர்ஷினிக்கும் (8) விஷாலுக்கும் பழி சண்டை...ப்ரீதா வர்ஷினியை ஒரு அதட்டு போட , அதில் விஷாலும் அடங்கிவிட, இருவருக்கும் புதிய இடம் கொடுக்கப்பட்டது.

4 வயசு மட்டும் சும்மாவா பின்ன?

வாசினி(4):  அம்மா நானும் அந்த முன்னாடி சீட்லதான் ஒக்காரணும்.

ப்ரீதா: அமாம். இப்ப நீ ஆரம்பி....

ராஜ்: வாம்மா பெரியப்பாகிட்ட வந்து ஒக்காந்துக்கோ! 
(என்ன இவர்? இன்னிக்கு சமாதானப் புறாவா?.....இருக்கட்டுமே! )

வர்ஷினி(4): இல்ல நான் மட்டும் ஒக்காந்துக்கறேன் . நீங்க பின்னால போங்க.

ராஜ்: நல்ல சீட்னு உக்காந்தேன்.... எழுந்துக்கறேன்...(தியாகச் செம்மலா இருக்காறே?)

ப்ரபா: டில்லி சரவணபவன் வந்தாச்சு! எல்லாரும் நல்லா சாப்பிடுங்க. ம் இறங்கலாம்.

ப்ரீதா: டிபன் சாப்டுட்டு ரெட் ஃபோர்ட் தானே போறோம்?.

ப்ரபா: ஆமாம் .. அப்பறம் என் ஃப்ரெண்ட் சொன்னான். டில்லியில எங்க சுத்தி பாக்க போனாலும் ஜூஸும் தண்ணியும் நிறைய வச்சுக்கணுமாம். இல்லேன்னா வெய்யில்ல உடம்பு தாங்காதாம்.  நாக்கு வரண்டுடுமாம்.

நான்: தண்ணி மட்டும் வாங்கிக்கலாம்!  நம்ப எங்கியும் ஆக்ரா மாதிரி தூரமா போகலியே! டில்லிக்குள்ள தானே இருக்கோம். அங்கங்க கடைகள் இருக்காத என்ன?

ப்ரீதா: ஆமாம்

சரவணபனுக்கு சும்மா போனாலே நல்லாதான் சாப்பிடுவோம். நால்லா சாப்பிடுங்கண்ணு வேறா சொல்லிட்டாங்க... கேக்கணுமா...? மணி 10.30 ஆகிவிட்டது. டிரைவர் போன் மேல போன் ப்ரபாவுக்கு.

ப்ரபா: சீக்கிரம் வரச்சொல்றான் டிரைவர். வெயில் ஜாஸ்தியானா சரியா பாக்க முடியாதாம்.

அதுக்குள்ள சின்னவங்களுக்குள்ள ஐஸ்கிரீம், மில்க் ஷேக் சண்டை...

நான் ஸ்வீட் ஐஸ்கிரீம் எதுவும் சாப்பிட வேண்டாம் என ஜாடையில் ராஜ் என்னை முறைக்க.... கூடவே என் பொண்ணும் முறைத்தாள். (ஏன் முறைப்புன்னு சொல்றேன் அப்பறம்...இப்ப என்ன அவசரம்?)
முறைப்புக்கு எதிர் முறைப்பு முறைத்துவிட்டு, குழந்தைகள் சாப்பிடும் ஐஸ்கிரீமை ஆசையாக பார்த்துக்கொண்டே மனசில்லாமல் எழுந்தேன்.

ப்ரபா: தண்ணி வாங்கிட்டு போலாம்

வண்டியில் ஏறி அனைவரும் உட்கார்ந்ததும்,  ட்ரைவர் இத்தனை லேட் பண்றீங்களேன்னு (ஹிந்தியில்) கேட்க...

ப்ரபா: எம்பா குழந்தைகள் இருக்காங்களே... எப்படி சீக்கிரம் முடியும்? சரி....நீ எம்பா கவலப் படறே ? ( இந்த மாதிரி ஏதோ அர்த்தத்தில் ஹிந்தியில் சொல்ல )


ட்ரைவர்: ( ஹிந்தியில் கண்டிப்பா கோபமாக பேசுவது புரிந்தது ) .......................................

ப்ரபா:    ( ஹிந்தியில் பதில் சொல்ல)...................

ப்ரீதா:  ப்ரபா...... விடு ... ட்ரைவரை ஏன் இப்ப கோச்சுக்கறே?

ப்ரபா:   அவந்தானே நம்பளை திட்றான்.

ராஜ்:  நம்ம சீக்கிரம் கெளம்பியிருக்கணும்....அதான் நான் அப்பவே சொன்னேன்!

(இது நெஜம்மா ராஜ் காத்தால சொன்னதுதான்.... எப்பவுமே சொல்றதும் தான்.....)

ப்ரபா: இந்த ப்ரீதாதான் பசங்களக் கெளப்ப செம்ம லேட் பண்ணிட்டா...

வர்ஷினி(8): ஆமாம் ... அம்மாதான்  நான் 2 நாளா சரியா குளிக்கலேன்னு தேச்சு தேச்சு குளிப்பாட்டி லேட் பண்ணிட்டா...

ப்ரீதா: திருப்தியாடி இப்ப?  நீ அழுக்காவே இரேன். எனக்கென்ன? 

வர்ஷினி(8):  ஓ...ஜாலியா  நானே குளிச்சுப்பேன்  ( கூட மத்த கொழந்தைங்க இருந்த தெம்பு )

ப்ரீதா: ப்ரபா நீ ஒரு நாள் ரெடி பண்ணி கெளப்பேன் இதுங்களை....பாக்கலாம்

ப்ரபா: கண்டிப்பா இவ்வளவு லேட் பண்ண மாட்டேன்...

ப்ரீதா: ஆமா... அழுக்கு மூட்டையாவே கிளப்பி விடுவே... ஸ்கூலுக்கு லேட்டா அனுப்புவ.

நான்: ப்ரீதா... விடேன்....சின்ன மேட்டர்.....(நானும் ராஜனும்... சண்டைன்னா என்னன்னே தெரியாத லட்சிய தம்பதி போல் .... சும்மா ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தோம்!....)

சண்டையும் பூசலும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 
பயமும் சத்தமும் அது.

இல்லையா பின்ன?

ராஜ்: ரெட் ஃபோர்ட் வந்தாச்சு.....

சண்டைகள் மறந்தோம்......தண்ணியும் வாங்க மறந்தோம்...  நல்லா வா...ங்...கப்...போ....றோம்....! யார் கிட்ட...? சொல்றேன்.....
(தொடரும்)